வியாழன், செப்டம்பர் 26, 2013

Avargal Unmaigal: இந்தியாவும் கேவலமான சட்டங்களும்

Avargal Unmaigal: இந்தியாவும் கேவலமான சட்டங்களும்: இந்தியாவும் கேவலமான சட்டங்களும் இங்கு இயற்றப்படும் சட்டம் மக்களை பாதுகாக்கவா இல்லை கிரிமனல்களை பாதுகாக்கவா? பாரம்பரிய நாடான ...

புதன், செப்டம்பர் 18, 2013

பெண்களின் உடைகளும், பாலியல் வன்கொடுமைகளும்...


"பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் உடைகளும் ஒரு காரணம்" என்பது பல காலமாக சொல்லப்படும் விஷயமே. விவாதத்திற்குரியதும் கூட. மதவாதிகளும், மிதவாதிகளும் மோதிக் கொள்ளும் கருப்பொருள் கொண்டதும் கூட, யாரேனும் ஒரு பிரபலம் அப்படியொரு கருத்தை சொன்னால், "எப்படி, அப்படி சொல்லலாம்" என்று எதிர்கேள்வி எப்போதும் எழுப்பப்படுகிறது. சொல்வதில் உண்மை உள்ளதா, இல்லையா என்கிற சிந்தனை வருவதற்கு முன்பே, "அப்படியெல்லாம் சொல்லக்கூடாது" என்று சொல்லிவிடுவார்கள்.

மதவாதிகள் - ஒரு பெண்ணின் ஆடையை தீர்மானிப்பதற்கும், சமூக ப்ரக்ஜையுடன் ஒருவர் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது அடிமைப்படுத்துகிறது என்றால் பின்னது அக்கறைப்படுத்துகிறது எனலாம். அது குறித்து ஆராய்வோம். காரணம், மீண்டும் ஒரு சர்ச்சை அம்மாதிரி எழுந்து அடங்கி உள்ளது.

"ஐதராபாத் மற்றும் நகரங்களில் பெருகிவரும் பெண்கள் பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் மோசமாக இருப்பதுதான் காரணம்" என்கிற ரீதியில் ஆந்திரமாநில காவல்துறைத் தலைவர் தினேஷ் ரெட்டி, கருத்து தெரிவித்ததாக டி.வி.சேனல்களில் வெள்ளிக் கிழமை செய்திகள் வெளியாகின.

இவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. "நாகரிக உலகில் இவருடைய கருத்து ஜீரணிக்க இயலாதது" என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிறகென்ன, வழக்கம் போல "நான் அப்படி சொல்லவே இல்லை" என்று ஜகா வாங்க வேண்டியது தானே. எதிர்ப்பு கிளம்பியதும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தனது கருத்தினை சில டிவி சேனல்கள் திரித்துக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார்." ஒரு காவல்துறை அதிகாரி ஏன் அப்படி சொல்ல வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா?

 "நாகரிக உலகில் இவருடைய கருத்து ஜீரணிக்க இயலாதது" என்கிற கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு - இந்த விஷயத்தை வேறு சில வகையில் அலசி ஆராய்வோம். "யாரும் எப்படிப்பட்ட உடை வேண்டுமானாலும் உடுத்தலாம். அதை மறுக்க இயலாது தான்" இருந்தாலும் உடை குறித்த விஷயங்களில் பிறரின் விமர்சன தலையீடு ஏன் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். சற்றே கைலியை யாரேனும் தூக்கி கட்டி இருந்தால் - சற்று தொடை தெரிய கட்டினாலே பின்னாலேயே ரெண்டு போடு போடுவார்கள் -காவல்துறையினர். நான் பார்த்து இருக்கிறேன். "ஏன் சாத்த வேண்டும்". அவர் கைலி. அவர் தொடை. எப்படி கட்டினால் என்ன? எப்படி காட்டினால் என்ன? ​பெண்கள் கூடும் இடத்தில் ஒரு ஆண் கண்ணியமாக தான் உடை உடுத்தி இருக்க வேண்டும் என்பதனாலேயே. ஆனால் இன்றைக்கு, பொது இடத்தில் மார்பு தெரிய ஒரு பெண் உடை உடுத்தினால் கூட ஏன் என்று கேட்கக்கூடாது என்கிற அளவு பெண்ணுரிமை வளர்ந்துள்ளதில் மகிழ்ச்சியே.

தொடை தெரிய கைலி கட்டிய நிகழ்வை வைத்தே ஒரு படத்தில் வடிவேலு காமெடி பண்ணி காவல்துறையிடம் அடி வாங்குவார். நான் டைப்ரைட்டிங் போன காலத்தில் பையன்களுக்கென்று எங்கள் ஆசிரியர் சில கட்டுப்பாடுகள் வைத்திருப்பார் - சட்டையில் எல்லா பட்டன்களும் போட்டிருக்க வேண்டும். காரணம் எதிரெதிரே பெண்கள் இருப்பார்கள். பையன்கள் கண்ணியமாக உடை உடுத்தி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே. ஜிம்னாஸ்டிக் செல்பவர்கள் - நெஞ்சை நிமிர்த்தி கொண்டு, சட்டை மேல் பட்டன் போடாமல் இருந்தால் திட்டுவார். நாங்கள் ஏற்று கொள்வோம்.

 மாணவிகளும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்தாலும் பெண் ஆசிரியைகள் கண்டிப்பார்கள்.இன்றைக்கு கல்லூரியில் மாணவர்கள் நலனுக்கென உடை கட்டுப்பாடு விதித்தால் - உடனே தொலைக்காட்சியில் - "நீயா... நானா" என்று மோதி கொள்கிறார்கள்.பொது இடத்து நாகரீகத்தோடு - அந்நாட்களில், வீட்டில் எப்படி என்றால், நாலைந்து குடித்தனங்கள் உள்ளது எங்கள் வீடு என்பதால் "ஒழுங்கா லுங்கிய கட்டு. நாலைஞ்சு பொம்பளை பிள்ளைங்க இருக்கிற இடம். நாகரிகமா இருக்கணும்" என்பார்கள் அம்மா. எங்களுக்கு மட்டுமல்ல புத்திமதி. பக்கத்து குடித்தனப் பெண்களுக்கும் தான். பெண்களின் உடை விலகி இருந்தால் கூட - இவர்களே உரிமை எடுத்து சரி பண்ணி விடுவார்கள்.

 எந்த தவறுக்கும் நாம் காரணமாய் இருந்து விடக்கூடாது என்பதை தவிர வேறில்லை. ஆண்கள் வைக்கும் கவர்ச்சி உடை, மனம் கெடுதல் குறித்த கருத்துகளுக்கு ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சொன்னால் - அதே கருத்தை சொல்லும் பெண்களை என்னவென்று சொல்வார்கள். இந்த பதினைந்து வருஷத்தில் எல்லாம் தான் மாறிவிட்டது. ஆடைகள் மட்டுமல்ல - மனதுகளும் தான்.

அன்றைக்கு அப்பா, அம்மா சொன்னதை கேட்டோம். இன்றைக்கு யாருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை. "நீ யென்ன சொல்றது. நா என்ன கேட்கறது" என்றாகிவிட்டது. கண்ணியமான உடை உடுத்துதல் என்பது ஒரு அடிப்படை விஷயம். அதை கூட ஒருவர் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - அது வெட்கக்கேடு.

ஆசிய நாடொன்றில் பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவது அதிகரித்ததால் - அரசாங்கம் அது குறித்து (உடைக்கட்டுபாடு) ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்தது. பிறகு எதிர்ப்பின் காரணமாக விட்டுவிட்டது. அரசாங்கத்திற்கு வேறு வேலையே இல்லை பாருங்கள். அதே நேரம் ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது - அடுத்தவருக்கு ஆபாசமற்றதாக தெரிகிறது. பார்வைக்கோளாறும், மனக்கோளாறும் யாருக்கு என்பதையும் தீர்மானிக்க வேண்டி உள்ளது.
கவர்ச்சியான உடை என்பதற்கான பின்விளைவுகள் என்னவென்று பார்த்தால் - அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் பிடிக்கும் வக்ரம் பிடித்தவர்களின் மொபைல் போன்கள்.

கவர்ச்சி என்பதை தாண்டி வேறு சில இறுக்கமான உடைகளால் உடம்புக்கு எத்தனையோ கேடு. ஜீன்ஸ் போன்ற உடைகளால் ஆண்மை குறைவு ஏற்படுகிற அபாயம் உள்ளது என்கிறது விஞ்ஞானம். நாம் ஒவ்வொரு விஷயத்திற்குமே - மதத்தின் கீழ் கட்டுப்படுகிறோம் அல்லது மருத்துவத்தின் கீழ் கட்டுப்படுகிறோம். சுய அறிவிற்கு வேலை கொடுத்து, "சரியா... சரியில்லையா" என்று கேட்டு அதன் கீழ் எப்போதும் கட்டுப்படுவதில்லை. அதனால் தான் வீண் சர்ச்சைகள்.

கலாச்சாரம்